ஏர் இந்தியாவுடன் இணைகிறது இந்தியாவின் விஸ்தாரா

இந்தியாவின் விமான நிறுவனங்களில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அடுத்தடுத்து செய்யப்படும் இந்த மாற்றங்களால் இந்தியாவின் விமானத் துறைக்கு இவ்வாரம் முக்கியத்துவம் வாய்ந்த வாரமாகப் பார்க்கப்படுகிறது.

டாட்டா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்குச் சொந்தமான விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைவதால் நவம்பர் 11ஆம் தேதி அதன் கடைசிப் பயணம் முடிவுக்கு வந்தது.

ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா இணைந்ததும் இன்னும் பெரிய நிறுவனமாக உருவாகும் ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 25 விழுக்காடு பங்குகள் இருக்கும்.

மற்றொரு மாற்றமாக, விமானத் துறையின் முன்னணி நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிவுக் கட்டண விமானச் சேவைக்கு அப்பாலும் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித் தடங்களில் வர்த்தக வகுப்புக்கான (Business Classs) சேவைகளை வழங்கவிருக்கிறது.

இந்த இரண்டு மாற்றங்கள், இந்தியாவின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களில் செய்யப்படும் முக்கிய மாற்றங்களாகும்.

ஏர் இந்தியா லாபமற்று செயல்படும் வேளையில் விஸ்தாராவை இணைக்கும் மிகவும் சிக்கலான முடிவை டாட்டா குழுமம் எடுத்துள்ளது. இதற்கு விமானிகளின் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இருந்தது. இதன் காரணமாக பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த இணைப்பின் மூலம் ஏர் இந்தியா, மேம்பட்ட சேவைகளை வழங்கி தரத்தை உயர்த்த முயற்சி செய்கிறது. 2021ஆம் ஆண்டில் லாபமற்ற ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசாங்கத்திடமிருந்து டாட்டா குழுமம் வாங்கியது.

இந்த நிலையில் இண்டிகோவிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் வழக்கமான மலிவுக் கட்டணச் சேவைகளோடு வர்த்தக வகுப்புகளுக்கான சேவைகளையும் இண்டிகோ வழங்கவிருக்கிறது.

விஸ்தாரா, அதன் வழக்கமான பாதைகளில் சேவையைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here