கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது எஞ்சிய கால சிறைத்தண்டனையை வீட்டிலிருந்தே அனுபவிக்குமாறு கடந்த 8.12.2023ஆம் தேதி நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் ஏதும் விவாதிக்கப்படவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கூறினார். நஜிப்பின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்து அக்கூட்டத்தில் விவாதிப்பதற்கு நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிகழ்ச்சி நிரலில் நஜிப்பின் அரச மன்னிப்பு விவகாரம் இடம்பெற்றிருக்கவில்லை. அப்போது நாட்டின் மாமன்னராக இருந்த அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷா நஜிப்பின் விண்ணப்பத்தை பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் சேர்க்கவில்லை என அவர் கூறினார். அக்கூட்டத்தில் அனைத்து மலேசியர்களும் அல்லது கைதிகளும் பொது மன்னிப்புக் கோருவதற்கு உரிமை உண்டு. எனவே நஜிப்பின் இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது நியாயமாகும் எனத் தாம் அக்கூட்டத்தில் பேசியதாக பிரதமர் தெரிவித்தார்.

நஜிப்பிற்கு அளிக்கப்பட்ட அரச மன்னிப்பில் இந்தக் கூடுதல் அதிகாரம் இடம்பெற்றிருந்ததா என கோத்தாபாரு உறுப்பினர் (பெரிக்காத்தான் நேஷனல்) டத்தோ தக்கியுடின் ஹசானின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தமது எஞ்சிய கால சிறைத்தண்டனையை வீட்டிலிருந்தே அனுபவிக்குமாறு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதாக கடந்த 5.12.2024ஆம் தேதி பெக்கான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஃபிடேவிட் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இதன் மீதான விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. நாட்டின் 16ஆவது மாமன்னராக இருந்த அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷா வழங்கிய அரச மன்னிப்பு மீதான முடிவை சீராய்வு செய்வதற்கான விண்ணப்பத்திற்கு அம்னோவின் முன்னாள் தலைவரான நஜிப் நீதிமன்றத்தில் புதிய ஆதாரங்களை ஒப்படைத்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் அவரின் மகனும் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான நிஸார் கையெழுத்திட்டிருந்தார். அதேபோல் கடந்த 8.12.2023ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் நஜிப்பின் அரச மன்னிப்பு விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை.
அக்கூட்டத்தில் தாம் கலந்து கொண்டபோது நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கான கூடுதல் அதிகாரம் குறித்து பேசப்படவில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். கடந்த 29.1.2023ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா கலந்து கொண்டிருந்தார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நிதி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்த நஜிப்பிற்கு நீதிமன்றம் 12 ஆண்டு சிறைத்தண்டனையையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்த வேளையில் கடந்த 2.2.2023ஆம் தேதி கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் அவருக்கான தண்டனையை 6 ஆண்டு சிறைத் தண்டனையாகவும் 5 கோடி ரிங்கிட் அபராதமாகவும் குறைத்தது. முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தற்போது காஜாங் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.




















