சபரிமலை பயணம் என்பது மிகவும் புனிதமான பயணமாகும். கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து அருள் செய்யும் மலை, சபரிமலை. சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்கியது முதல், சபரிமலை யாத்திரை நிறைவு செய்து வீட்டுக்கு திரும்பும் வரையிலான ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கான செயல்முறைகளாகும்.
மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து, சத்தியமான பொன்னு பதினெட்டாம் படியில் ஏறி சென்று, ஐயப்பனை கண் குளிர கண்டு, மனம் உருகி வேண்டுபவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் என்பது நிச்சயம். மனிதன், தெய்வத்தை நெருங்கிச் செல்வதற்கான வழிமுறையே சபரிமலை விரதத்தின் நோக்கமாகும்.
சபரிமலை செல்லும் பலரும் செய்யும் பொதுவாக தவறுகளில் முக்கியமானது, அங்கிருந்து வீட்டிற்கு மணி எடுத்து வருவது.
சபரிமலை சன்னிதானம் செல்வதற்கு முன் பக்தர்கள் மாளிகைப்புறம் சென்று மாளிகைப்புரத்தம்மன் அல்லது மஞ்சமாதாவை வழிபட்டு விட்டு செல்வது வழக்கம். கடுமையான துன்பங்களில், பிரச்சனைகளில் இருப்பவர்களின் தங்களின் பிரச்சனைகள், குறைகள் தீர வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்டு, மாளிகைப்புரத்தம்மன் சன்னதிக்கு பின்புறம் இருக்கும் மணிமண்டபத்தில் மணியை கட்டி விட்டு வருவது வழக்கம்.
மணி கட்டி விட்டு வந்தால், நம்முடைய பிரச்சனைகளை மணிகண்டனான ஐயப்ப சுவாமியிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டதாகவும், இனி அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அர்த்தம்.
மாளிகைப்புரத்தில் உள்ள மணிமண்டபத்தில் மணி கட்டுவதன் சரியான அர்த்தம் தெளியாமல், கோவிலில் இருக்கும் மணியை எடுத்து வந்து நம்முடைய வீட்டில் வைத்தால் நமக்கு நல்லது நடக்கும் என நினைத்துக் கொண்டு அங்கு கட்டப்பட்டிருக்கும் மணியை எடுத்து வந்து விடுகிறார்கள்.
உண்மையில், யாரோ ஒருவர் அவரின் குறை அல்லது துன்பம் தீர கட்டிய மணியை நீங்கள் எடுத்து வருவதால், அவர்களின் துன்பங்கள் அல்லது குறைகளை அல்லது நோய்களை அவர்களுக்கு பதிலாக நீங்கள் உங்களின் வீட்டிற்கு எடுத்து வருகிறீர்கள் என்று அர்த்தம். இது நம்முடைய துன்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக, அதிகமாக்கி விடும்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் துன்பங்கள் நீங்க வேண்டும் என அன்னையிடம் மனதார வேண்டிக் கொண்டு, யாத்திரை செல்லும் போதே வீட்டில் இருந்து புதிய மணியை வாங்கிச் சென்று, அங்கு கட்டி விட்டு வர வேண்டும். மாறாக மாளிகைப்புறத்தில் உள்ள மணிமண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகளை வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.