சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் 2017ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மலேசிய ரிங்கிட் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. ஒன்பது பேர் கொண்ட அறவாரியக் குழு இதனை நிர்வகித்து வருகிறது. அறவாரிய உறுப்பினர்களோடு 110 உறுப்பினரும் அறவாரியப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எச்.எம்.எஸ்.கே என்னும் வடிவமைப்பாளர் நிறுவனம் அறவாரியத்தின் திருக்கோயில், சைவ சமயக் கல்லூரி, மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைப்பதற்கான ஆலோசனை நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது.
சைவ ஆகம விதிகளின்படி ஒரு மாதிரிக் கோயிலை அமைத்தல், சைவ சமயம் உள்ளிட்ட இந்து சமயக் கல்வியை மலேசிய இந்துக்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு அறிவும் ஆற்றலும் மிக்க சமய ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றை அமைத்தல் ஆகியன அறவாரியத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் வழி மலேசிய இந்தியர்களின் சமய அறிவை வளப்படுத்துதல். சமயத்தின் வழிச் சமூகச் சீர்கேடுகளைக் களைதல், சைவ ஆகம நெறிகளுக்கு முரணான கிரியைகளைக் கைவிட்டு ஆகம விதி முறைகளுக்கு உட்பட்ட வழிபாட்டு முறைகளைக் கைக்கொள்வதற்கு வழி காட்டுதல். சைவ ஆகம நெறிகளுக்கு உட்பட்டுச் சைவ சமயத்தைத் தனிப்பெரும் சமயமாக வளர்த்தல். சைவ சமயத்தின் சித்தாந்தம் என்னும் அறிவு நெறியைச் சமயக் கல்வியின் மையப் பொருள் ஆக்குதல்.
சைவ சமயக் கல்வியைப் பெறும் மாணவர் அனைவரும் கடவுள், உயிர், உலகம், சைவ வாழ்க்கை முறை ஆகியவற்றில் சிறந்த அறிவைப் பெறுவதோடு இனம் மதம் கடந்த மனிதநேயத்தை வளர்த்தல், எல்லா உயிர்களையும் பேணிக் காத்தல், இயற்கை வளங்களைப் பேணுதல் ஆகியவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுதல், மலேசியாவின் பல்லின மக்களுடன் நல்லிணக்கமாக வாழும் சிறந்த மலேசியரை உருவாக்குதல், இவற்றின் வழி மலேசிய இந்தியர்களிடையே ஆக்கப்பூர்வமான சமூக உருமாற்றத்தைக் கொணர்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
இதுவரை சைவத் திருக்கோயில், சைவ சமயக் கல்லூரி, மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைப்பதற்கு உலுசிலாங்கூர், கெர்லிங் பட்டணத்தின் அருகில் 7.49 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அறவாரியத்தின் அறங்காவலர்கள், உறுப்பினர்கள், சைவ சித்தாந்த மாணவர்கள், பொதுமக்கள் வழங்கிய நன்கொடையாக எட்டு மில்லியன் மலேசிய ரிங்கிட் நிலம் மற்றும் வைப்புநிதியாக வைக்கப்பட்டுள்ளது. . கட்டுமானத்திற்கான 4 நிலச் சீரமைப்புப் பணிகள் 20 விழுக்காடு பணி நிறைவடைந்துள்ளது.
எதிர் வரும் மே 10ஆம் தேதி அறவாரியத் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று ஷாஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நிகழவுள்ளது. நல்லுள்ளம் கொண்ட இந்துக்களும் சான்றோரும் நன்கொடை வழங்கி இத்திட்டத்தின் வெற்றிக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.



















