நஜிப்பிற்கு உதவுவதில் இருந்து நான் ஓடிவிட மாட்டேன் -ஜாஹிட் திட்டவட்டம்

மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் முழு மன்னிப்புக் கேட்டு மனு செய்யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வழக்கறிஞரிடம் வழங்கியிருக்கின்றார். அம்னோ முன்னாள் தேசியத் தலைவரான நஜிப்பிற்காக மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சியாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று  துணைப்பிரதமரும் அம்னோ தேசியத் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். நஜிப்பிற்கு உதவுவதில் இருந்து நான் ஒருபோதும் ஓடிவிட மாட்டேன். நஜிப்பின் துணைவியார், பிள்ளைகள் அவரது உடன்பிறப்புகள் உட்பட நஜிப் குடும்பத்தாருடன் நான் எப்போதும் நட்புறவுக் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

சட்டரீதியாக நாங்கள் அனைத்தையும் செய்திருக்கிறோம். நீதி மறு ஆய்வு வரை நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இப்போது மாட்சிமை தங்கிய மாமன்னரின் கீழ் இயங்கும் மன்னிப்பு வாரியத்திடமும் மனு செய்யப் போகிறோம். நாங்கள் செய்யும் கடைசி முயற்சி இது. டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் முழு மன்னிப்புக் கோரும் மனுவை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்பிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மாமன்னரிடம் இந்த மனுவை தாக்கல் செய்ய டத்தோஶ்ரீ நஜிப் தனது வழக்கறிஞருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கி இருக்கிறார். சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் அது எப்போது வரும்? மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் மனு செய்திருக்கிறோம் என்று ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிரார்.

1987ஆம் ஆண்டு நான் நஜிப்பின் அரசியல் செயலாளராக இருந்திருக்கிறேன். நஜிப்பிற்கு துணைப்பிரதமராகவும் இருந்திருக்கிறேன் என்று அவர் சொன்னார். எனக்கு நிறைய நன்மைகள் செய்த நஜிப்பை விட்டு விலகி விடுவேன் என்ற கூற்று ஏற்புடையதல்ல. அந்த கூற்று அறிவுபூர்வமானதும் அல்ல. அவர் என் பாஸ் மட்டுமல்ல. அவர் என் சகோதரர். ஒரே ரத்தமாக இல்லாவிட்டாலும் நாங்கள் உடன்பிறப்புகள் தான்.  ஒவ்வொரு முறையும் அம்னோ உச்சமன்றம் கூடும்போது நஜிப் விஷயம் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here