வாஷிங்டன்,அமெரிக்காவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்ற வெளிநாட்டு மாணவர்கள் மீது ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக இந்தியாவை சேர்ந்த ரஞ்சனி சீனிவாசன் என்கிற மாணவியின் கல்வி விசாவை டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ரத்து செய்தது.அதை தொடர்ந்து அவரை நாடு கடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பாகவே ரஞ்சனி சீனிவாசன் தாமாக அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை எதிர்ப்பதாக குற்றம் சாட்டி இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவர் பதர் கான் சூரி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கைதானதுக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரது வக்கீல் கூறியதாவது:-பதர் கான் சூரியின் மனைவி பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்டவர். கணவன்-மனைவி இருவரும் இணையதளங்களில் பாலீஸ்தீனத்துக்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதி வந்தனர்.
தற்போது அவர், லூசியனாவின் அலெக்ஸாண்ட்ராவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோர்ட்டு விசாரணைக்காக அவர் காத்திருக்கிறார். டிரம்ப் நிர்வாகம் அவரை நாடு கடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.










