அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை இயலா அலெக்சாண்ட்ரா (19வயது, 140), போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (23வயது, 2வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
முதல் முறையாக டபிள்யூடிஏ போட்டியில் களம் கண்டுள்ள இயலா ஆரம்பம் முதலே முன்னணி வீராங்கனையான இகாவை திணறடித்து புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டில் இழுபறி நீடித்தது. ஒரு கட்டத்தில் இயலா 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார்.
எனினும் 2வது செட்டையும் போராடி 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.இதன்மூலம் இயலா 2-0 என நேர் செட்களில் உலகின் 2ம் நிலை வீராங்கனை இகாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் இங்கிலாந்தின் எம்மா ராடுகானும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3வது செட் பரபரப்பானதாக அமைந்தது. இதில் ஆவேசமாக விளையாடிய பெகுலா 6-2 என்ற கணக்கில் கடைசி செட்டை கைப்பற்றி வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறினார்.








