கர்நாடகாவில் RAPIDO, UBER உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு அதிரடி தடை!

ஓலா, ரேபிடோ, உபேர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை நிறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு உபர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மேலும் மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் பொருத்தமான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளை 6 வாரங்களுக்குள் தடை செய்ய உத்தரவிட்ட அவர், 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here