பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவர். ஆனால் ஒரு பெண்ணின் மகிழ்ச்சியே வீட்டின் நாட்டின் மகிழ்ச்சி என்கிறார் பிராணா வைலட் ஹீலிங் ஸ்தாபகர் முனைவர் டாக்டர் சிவ விக்ரமன் பழனி. பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளுக்கு கர்மாவை குறைக் கூறாமல் எதிர்த்து போராட வேண்டும் என்று அவர் பெண்களின் உணர்வுகள், பொருளாதாரம் குறித்த நிகழ்ச்சியின்போது கூறினார். பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பிற இனத்தைச் சேர்ந்தவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்களில் பலர் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உணர்வுபூர்வமாக அணுகுகின்றனர். அதனால் அவர்களால் பிரச்சினைக்குத் தீர்வினை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எங்கள் பிராணா வைலட் ஹீலிங் மையம் கடந்த 15 ஆண்டுகளாக இலவச ஹீலிங் பயிற்சிகளை நடத்தி வருகிறோம். இது தொடாமல், மருந்துகள் இல்லாமல் நோய்களை குணமடைய செய்யும் வழிமுறையாகும். எங்களிடம் வருபவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறையை மாற்றியமைக்க நாங்கள் பயிற்சிகளை வழங்குகிறோம். உலகில் 69 நாடுகளுக்கு சென்று இந்த ஹீலிங் பயிற்சியை நடத்தி வருகிறோம். குறிப்பாக இந்தியா, பெரும்பாக்கத்தில் மிகப் பெரிய மையம் இயங்கி வருகிறது.
நமது எண்ணங்களே நமது வாழ்க்கையாக மாறுகிறது. உதாரணத்திற்கு எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி வாழ்க்கை, எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று நமக்குள் தோன்றும் எண்ணத்தை உடலிலுள்ள அனைத்து செல்களும் கேட்கின்றன. அதற்கு ஏற்றார்போல் நமது உடல் செயல்படத் தொடங்குகிறது. அதனால் எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிராணா வைலட் ஹீலிங் மையத்தில் இணைந்து பலனடைந்த சிலர் தங்களின் அனுபவங்களை மக்கள் ஓசையிடம் பகிர்ந்து கொண்டனர். வனஜா ஜே துரைசாமி கூறுகையில் தனக்கு காலில் பிரச்சினை இருந்ததாகவும் மாடிப்படிக் கூட ஏற முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் ஆனால் ஹீலிங் மையத்திற்கு வந்த டாக்டர் சிவா கற்று தந்த பயிற்சி, உணவு முறையினால் தன்னுடைய கால்வலிக்கு நிரந்தரத் தீர்வினை கண்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுதித்ரா கூறுகையில் 2017ஆம் ஆண்டு முதல் ஹுலிங் மையத்துடன் இணைந்திருப்பதாகவும் தனக்கு இருந்த ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு யோகா பயிற்சி, ஹீலிங் ஆகியவற்றின் வழி நிவாரணம் அடைந்ததாகக் கூறினார்.

நாகராணி பெரியதம்பி பேசுகையில் தனக்கு 5 வயது வரை கண்பார்வை நன்றாக இருந்ததாகவும் அதன் பின் கண் பார்வை மங்க ஆரம்பித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு கண் முழுமையாக பறிபோனதாகவும் மற்றொரு கண் 20 விழுக்காடு மட்டுமே பார்வை இருக்கிறது என்றார். ஏன் இந்த வாழ்க்கை என்று நான் நினைத்தபோது தான் பிராணா வைலட் ஹீலிங் மையம் குறித்து இங்கு வந்தேன். இவர்களின் பயிற்சி, தன்னம்பிக்கையான பேச்சு ஆகியவை என் வாழ்க்கைக்கு ஒரு புது தெம்பினை தந்திருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.











