ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தியைத் தடைசெய்ய திட்டமிடப்படுவதாக பாலி ஆளுநர் ஐ வயன் கோஸ்டர், அறிவித்துள்ளார். பல்வேறு சுற்றுப்புற பேரிடர்களுக்கு வித்திடும் கழிவுப் பிரச்சினைகளைக் களைய அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஜனவரி 2026ஆம் ஆண்டிலிருந்து ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தி தடை செய்யப்படும் என்ற புதிய கொள்கையை அறிவிக்க கோஸ்டர் டென்பசாரில் குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார்.
“எழில் நிறைந்த சுற்றுச்சூழல், கலாசாரம் ஆகியவற்றால் பாலி பல சுற்றுப்பயணிகளைக் கவர்கிறது. சுற்றுப்புறம் சேதமடைந்தால் பிறகு யாரும் இங்கு வர விரும்பமாட்டார்கள். சுற்றுப்பயணிகளும் முதலீட்டாளர்களும் இருக்கமாட்டார்கள். சுற்றுப்பயணம் இல்லாமல் பொருளியல் வளர்ச்சி இல்லை,” என்றார்.
புதிய கொள்கைக்கு மத்திய அரசாங்கத்தின் முழு ஆதரவு இருப்பதாகத் கோஸ்டர் தெரிவித்தார். சுற்றுப்புறத்துக்கு உகந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் வட்டாரத்தில் உள்ள இதர நாடுகளுக்குப் பாலி முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் கூறினார்.








