கிரேட்டா தன்பர்க்கை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த இஸ்ரேல்..!

காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் ஜூன் 1ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து புறப்பட்டது.

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும். காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் ‘மேடலின்’ என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் இருந்தனர்.

கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர். பிரான்ஸ் சென்று அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார்.

தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மற்ற ஆர்வலர்களையும் விடுவிக்க வேண்டும் என தன்பர்க் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுத்து நிறுத்தியபோது குழப்பமான, நிச்சயமற்ற சூழ்நிலை உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here