அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

வாஷிங்டன்,அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனை தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.அதன்படி விசாக்காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைது செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கடந்த 7-ந் தேதி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லை என கூறி புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நாடு கடத்தும் முயற்சி துரிதமாக நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி ஒடுக்க முயன்றனர்.இதனையடுத்து டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். அப்போது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. எனவே போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்

இதனையடுத்து போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டம் மேலும் தீவிரம் அடைவதால் இதனை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் அங்கு ராணுவத்தை குவித்துள்ளது.பொதுவாக தேசிய நெருக்கடி ஏற்படும்போதுதான் மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவர். ஆனால் தற்போது மாகாண கவர்னரின் அனுமதியின்றி டிரம்ப் அங்கு ராணுவத்தை நிறுத்தி உள்ளார். இதனை எதிர்த்து கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here