சமயம் உள்ளிட்ட இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சங்கம் என்றால் அது இந்து சங்கம் என்பதனை யாரும் மறுக்க முடியாது. சமயத்திற்கு எங்களால் முடிந்தளவு உதவிகளை செய்து வருகிறோம் கூட்டரசு பிரதேச மாநில இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலய மாநாட்டில் சிறப்புரையாற்றிய மலேசிய இந்து சங்கத்தின் துணைத்தலைவர் கணேஷ் பாபு தமதுரையில் கூறினார். நமது சமயத்தை வளர்க்க நாம் முயற்சி செய்யாவிட்டால் நமது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் போல் நாம் ஆகிவிடுவோம்.
மலேசிய இந்து சங்கத்திலேயே நாம் ரயில் பயணிகளை போல் பயணிக்கிறோம். அதற்கு அர்த்தம் என்னவென்றால் எநாம் ஒன்றாக பயணிக்கிறோம். ஆனால் அவரவர் இடம் வரும்போது அல்லது பிரச்சினை எழும்போது விலகி விடுகின்றனர். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்றால் பிரச்சினை எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதனை சமாளிக்க நாம் ரயில் பயணிகள் போல் இல்லாமல் சகோதரத்துவத்துடன் இருந்து பிரச்சினைகளை கைகோர்த்து களைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பதுபோல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாம் எதிர்நோக்கும் குறிப்பாக ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று அவர் தெரிவித்தார். நமக்குள் மிக அவசியமானது ஒற்றுமையும் புரிந்துணர்வும் என்றும் அவர் கூறினார்.
கூட்டரசு பிரதேச மாநில இந்து சங்கத் தலைவி பாலாமணி சுப்ரமணியம் பேசுகையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கானத் தீர்வு நம்மிடையே இருக்கிறது. நாம் தனித்தனியாக இயங்குவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் போகிறது. நாம் ஒரு அதிகாரியையோ அல்லது அமைச்சரையோ பார்க்க வேண்டுமெனில் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் தனி தனி குழுவாக சென்று பார்க்கும்போது உதவி செய்ய வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் கூட மாறி விடுகிறது என்றார்.
சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் தேவையில்லாமல் லஞ்ச ஊழல் பிரச்சினையில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று எம்ஏசிசி சூப்பிரண்டெண்ட் மோகனதாஸ் சண்முகம் வலியுறுத்தியதோடு பல விரிவான விளக்கங்களையும் அவர் வழங்கினார். மேலும் ஏஎஸ்பி முருகேசன், சொக்சோ அதிகாரி ராஜலிங்கம் ஆகியோர் அவரவர் துறையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையும் அதே வேளை தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கினர்.









