கிள்ளான் பள்ளத்தாக்கில் புதன்கிழமை முதல் சாலைப் போக்குவரத்துத் துறையால் (JPJ) பறிமுதல் செய்யப்பட்ட 53 வாகனங்களில், ஒரு முக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும்.
இரண்டு லம்போர்கினிகள், ஒரு ஆஸ்டன் மார்டினையும் பறிமுதல் செய்ததாக JPJ மூத்த அமலாக்க இயக்குநர் கிஃப்லி மா ஹாசன் தெரிவித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செலுத்தப்படாத அல்லது காலாவதியான சாலை வரி அல்லது காப்பீட்டில் இயங்கும் 1,000க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களின் இருப்பிடங்களையும் உரிமையாளர்களையும் JPJ அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்களில் பதிவு செய்யப்படாத எண் தகடுகள் மற்றும் பிற தொழில்நுட்ப குற்றங்களும் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்களின் பல உரிமையாளர்கள் தங்கள் சாலை வரி உள்ளிட்ட காப்பீட்டைப் புதுப்பிக்க மறந்துவிட்டதாகக் கூறினர். இருப்பினும், இந்த சாக்குப்போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது, குறிப்பாக சில வாகனங்களில் 2022 வரை காலாவதியான சாலை வரி இருந்ததால் என்று கிஃப்லி கூறினார்.
நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், காலாவதியான சாலை வரி இல்லாமல் சொகுசு கார்களை ஓட்டியதற்காக மூன்று வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அவர்களில் ஒருவர், ஓட்டுநர் உரிமத்தைக் காட்டச் சொன்னபோது, அனைத்துலக உரிமத்தை ஒப்படைத்தார், அது போலியானது என்று சோதனையில் தெரியவந்தது. பின்னர் அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது போலி உரிமத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைக்காக JPJ சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.









