கோலாலம்பூர்,:
ஏழ்மையில் உள்ள நோயாளிகளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைக்கான கிட்டத்தட்ட முழு செலவையும் சுகாதார அமைச்சகம் (MOH) ஏற்றுக்கொள்வதாகவும், மாதத்திற்கு அதிகபட்சம் RM1,630.50 வரை மானியம் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது, சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 138 அரசு சாரா அமைப்புகள் (NGO) நடத்தும் டயாலிசிஸ் மையங்களில் மேற்கொள்ளப்படும் ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைகளுக்கு பொருந்தும். நோயாளிகள் மாதத்திற்கு RM10-ஐ தாண்டாத குறைந்த கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.
“ஒவ்வொரு ஹீமோடையாலிசிஸ் அமர்விற்கும் RM100 மானியம் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு அதிகபட்சம் 14 அமர்வுகள் வரை இது பொருந்தும். அதேசமயம், ஒவ்வொன்றும் RM18.50 மதிப்புள்ள எரித்ரோபொய்டின் ஊசிகள் மாதத்திற்கு அதிகபட்சம் 13 தடவைகள் வழங்கப்படும்.
“ஒரு நோயாளியின் மாதாந்திர சிகிச்சை செலவு RM1,640.50 ஆகும். அதில் RM1,630.50-ஐ அரசு மானியமாக ஏற்கிறது. மானிய ஒப்புதல் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் அந்த காலம் முடிந்ததும் விண்ணப்பித்தால் புதுப்பிக்கப்படலாம்,” என அவர் கூறினார்.
செனட்டர் டான் ஸ்ரீ பேராசிரியர் டாக்டர் முகமது ஹனிஃபா அப்துல்லா, அதிகரித்து வரும் டயாலிசிஸ் செலவுகளை கட்டுப்படுத்தவும், B40 நோயாளிகளின் நிதிச் சுமையை குறைக்கவும் சுகாதார அமைச்சின் நீண்டகாலத் திட்டங்களை குறித்து கேள்வியெழுப்பினார்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற காரணிகளால் சிறுநீரக நோய் (CKD) அதிகரித்து வருவதால், டயாலிசிஸ் சிகிச்சை செலவுச் சுமை கூடிவருவதாக லுகானிஸ்மான் குறிப்பிட்டார்.





















