உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் நுபுர்

லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 80+ கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் நுபுர் ஷியோரன். இது இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டத்தில் 26 வயதான நுபுர், உஸ்பெகிஸ்தானின் ஓல்டினாய் சோடிம்போவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 80+ கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இல்லாத நிலையில் நேரடியாக காலிறுதியில் நுபுர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதல் சுற்று முதலே நுபுர் கொடுத்த ‘பஞ்ச்’-கள் கிளியராக இருந்தன. அதனால் அவரது கை ஆட்டத்தில் ஓங்கி இருந்தது. இருவருக்கும் இந்த ஆட்டத்தில் 1 புள்ளிகள் பெனால்டியாக கழிக்கப்பட்டது. இறுதியில் 4-1 என்ற கணக்கில் நுபுர் வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை சேமா டஸ்டாஸை அவர் எதிர்கொள்கிறார்.இன்று பின்னிரவு நடைபெறும் ஆட்டத்தில் இரண்டு முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன், துருக்கியின் காகிரோக்லு பஸ் நாஸை எதிர்கொள்கிறார். இதே போல இந்தியாவின் பூஹா ராணி, அபினேஷ் ஜம்வால் ஆகியோரும் தங்களது காலிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here