இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 65 ஆயிரத்து 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. இதனால் போர் மேலும் தீவிரமடைந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here