நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்விக்காகப் போராடியதற்காக, 2012-ஆம் ஆண்டு தனது 15-வது வயதில் பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது மலாலாவைத் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், பிரிட்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது 28 வயதான மலாலா, தன் கணவர் அஸ்ஸர் மாலிக்கோடு இணைந்து பெண் கல்வி செயல்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்களுடன் கஞ்சா (Marijuana) உட்கொண்டபோது, 13 ஆண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய தலிபான்களின் நினைவுகள் மீண்டும் துரத்தியதாக அவர் கூறியுள்ளார்.
தி கார்டியன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன. என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அந்தத் தாக்குதலை நான் மீண்டும் எதிர்கொள்வது போல இருந்தது.
பேருந்து, துப்பாக்கி வைத்திருந்த நபர், இரத்தம்… எல்லாம் முதல் முறையாகப் பார்ப்பது போல இருந்தது. என் உடல் பயத்தில் நடுங்கியது. என் சொந்த மனதிலிருந்தே என்னால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
கஞ்சா போதையில் தான் சுயநினைவை இழந்ததாகவும், நண்பர் ஒருவர்தான் தன்னை அறைக்குத் தூக்கிச் சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தனக்குப் பதட்டத் தாக்குதல்கள் (Panic Attacks), தூக்கமின்மை மற்றும் கடுமையான மனக் கவலைகள் தொடங்கின என்றும் கூறினார்.
இதன்பின் ஒரு மனநல மருத்துவரை அணுகியபோது, தலிபான் தாக்குதல், அவர்களின் ஆட்சியில் கழித்த குழந்தைப்பருவம், படிப்பு அழுத்தம் போன்றவையே தனது மனக்காயங்களுக்குக் காரணம் என மருத்துவர் அடையாளம் கண்டதாகவும், அவரது உதவியால் அந்தக் கொடூர நினைவுகளில் இருந்து படிப்படியாக மீண்டதாகவும் மலாலா கூறினார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ‘Finding my way’ என்ற தனது அடுத்த புத்தகத்தில் விரிவாக எழுத உள்ளதாக மலாலா மேலும் தெரிவித்தார்.