சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் ; மீட்கக்கோரி வெளியிட்ட வீடியோ

ரியாத்,இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சவுதி, கத்தார் உள்பட அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதில் பலரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்தியர்களை வேலைக்கு சேர்த்தவர்கள் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக்கொண்டு துன்புறுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அவரை வேலைக்கு சேர்த்த நபர் அவரது பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக்கொண்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளார்.

இதையடுத்து தன்னை மீட்கக்கோரி , உதவிகேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னை வேலைக்கு சேர்த்தவர் தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தான் இந்தியாவுக்கு திரும்ப பிரதமர் மோடி உதவ வேண்டும் என்றும் அந்த இளைஞர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக சவுதி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதவிகேட்டு வீடியோ வெளியிட்ட இளைஞருக்கும் அவருக்கு வேலை வழங்கிய நபருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் சமூகவலைதளத்தில் வைரலாகவே இளைஞர் இவ்வாறு வீடியோ வெளியிட்டதாகவும் சவுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள நபரை தொடர்புகொள்ள முயற்சி நடைபெற்று வருவதாகவும், அவரது இருப்பிடம் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை என்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here