ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தாசில்தார் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
இந்த பயங்கர வெடிவிபத்தில் போலீஸார், FSL அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தாசில்தாரும் சம்பவ இடத்திலேயே பலியானார். வெடிப்பின் தாக்கத்தில் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.
சம்பவத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 29 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்தன.
CCTV-யில் பதிவு
வெடிப்பின் அதிர்ச்சி காட்சிகள் அருகிலிருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ளன. வெடிப்பு சத்தத்தில் அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைந்து சிதறியன. “நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைத்தோம்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
3,000 கிலோ வெடிமருந்தே காரணம்
சமீபத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு, காஷ்மீர் போலீஸார் 3,000 கிலோ வெடிமருந்துகளை பறிமுதல் செய்திருந்தனர். அவை நவ்காம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவையே தற்போது வெடித்து பெரும் அழிவை ஏற்படுத்தியதாக ஆரம்ப வினா வினாக்கள் கூறுகின்றன.
தீவிரவாதத் திட்டம் முறியடிக்கப்பட்ட தளம்
இந்த நவ்காம் போலீஸ் நிலையமே சமீபத்தில் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை உறுதி செய்து, விசாரணை தொடங்கிய தளமாகும். ஸ்ரீநகர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முஹம்மது போஸ்டர்கள் குறித்து விசாரணை நடத்தி, டாக்டர் அடில் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் ஹரியானாவின் பரிதாபாத் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் சகீல் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை மேற்கொண்டு 3 ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.























