கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) டெர்மினல் 1இலிருந்து புறப்பட இருந்த ஒரு விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல் தகவல் கிடைத்ததும், விமான நிலையத்தில் உடனடியாக பாதுகாப்பு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் வெடிகுண்டு நீக்கும் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முழுமையான சோதனைகளை மேற்கொண்டது. விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, விமானத்திலும் பயணிகள் பகுதிகளிலும் எந்தவித ஆபத்துக்களும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளது. அவர் மீது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதோடு, விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தடுமாறச் செய்யும் கடுமையான குற்றமாகும் என எச்சரித்துள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.





















