சிலாங்கூர் மாநில அரசு தமிழ் மொழிக்கான இலவச வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள அறிவிப்பை மலேசிய இந்து சங்கம் வரவேற்பதாக அதன் தேசிய தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் AMN,ASA தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் அவர், தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து இந்த அறிவிப்பை வழங்கிய சிலாங்கூர் மாநில முதல்வருக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனினும், விருப்ப அடிப்படையிலான அல்லது தற்காலிக வகுப்புகள் மட்டும் போதுமானதல்ல என்பதை மலேசிய இந்து சங்கம் தெளிவாக வலியுறுத்துகிறது. தமிழ் மொழியின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய அல்லது கட்டமைக்கப்பட்ட பாடமாக அமல்படுத்த வேண்டும்.
தமிழ் உலகின் மிகப் பழமையான, உயிருடன் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும்.
மலேசிய சமூக வரலாறிலும் தமிழின் பங்கு முக்கியமானதாக உள்ளது. பள்ளி மட்டத்தில் நிறுவன ரீதியான கல்வி இல்லையெனில், எதிர்கால தலைமுறைகள் தங்கள் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்துடன் உள்ள தொடர்பை இழக்கும் அபாயம் உள்ளது.
மொழி பாதுகாப்பிற்கு பள்ளிகள் மிகச் சிறந்த மேடையாகும். தமிழ் மொழியை முறையாக பள்ளிக் கல்வியில் இணைப்பதன் மூலம், பன்மொழித் திறன், பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை மேலும் வலுப்பெறும்.
முன்னேற்றத்தை நோக்கி செயல்படும் சிலாங்கூர் மாநிலம், இந்த முயற்சியில் தலைமைப் பொறுப்பேற்று தேசிய அளவில் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துகிறது. இதனை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க மலேசிய இந்து சங்கம் தயாராக உள்ளது எனவும் எனவும் கூறியுள்ளார்.









