இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஜோடி 118 ரன்கள் சேர்த்து அணியை வலுப்படுத்தியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 93 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை அளித்தார்.
இருப்பினும், இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 49 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.









