பலுசிஸ்தானில் மேலும் 22 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக். ராணுவம் – பலி எண்ணிக்கை 177 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பலுசிஸ்தானில் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு மேலாக பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இதுவரை கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த தாக்குதல்களில் இதுவரை 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதல்களில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் தரப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here