அம்பாங் அருகே பயங்கர காட்டுத்தீ: வீடுகளைச் சூழ்ந்த புகை – SUKE நெடுஞ்சாலையில் பரபரப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 2:

அம்பாங், புக்கிட் கெம்பாரா (Bukit Kembara) மலைப்பாதையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் இன்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ கொழுந்துவிட்டு எரிவதால், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், மலைப்பகுதியில் தீ பிரம்மாண்டமாக எரிவதும், அதன் புகை மேகங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே உயரமாக எழுவதும் பதிவாகியுள்ளது.

இது ஒரு காட்டுத்தீ என்பதை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட இடம் ஒரு மலைக்குன்றின் மீது இருப்பதால், அங்கு தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுக்கவும், குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here