வழிபாட்டுத் தல விவகாரம்: நிதானமும் பேச்சுவார்த்தையுமே தீர்வு – அமைச்சர் ஆரோன் அகோ டாடாங் வலியுறுத்தல்!

கோலாலம்பூர்:

மலேசியாவில் முறைப்படுத்தப்படாத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ‘காரா’ (Garah – சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இயக்கம்) போன்ற போராட்டங்கள் குறித்து தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாடாங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத மற்றும் இன நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, இத்தகைய உணர்ச்சிகரமான விவகாரங்களை மிகுந்த ஞானத்துடனும் விவேகத்துடனும் கையாள வேண்டும்.

மலேசிய அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கு ‘மடானி’ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. எனினும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் சட்டத்திற்கும், உள்ளூர் அதிகாரிகளின் அதிகார வரம்புக்கும் உட்பட்டே தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலான அவசர நடவடிக்கைகளைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய ஒற்றுமை என்பது நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து என்று குறிப்பிட்ட அமைச்சர், உணர்ச்சிகரமான தூண்டுதல்கள் அல்லது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொறுப்பற்ற கருத்துகளால் இந்த ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது என்றார். பொதுவெளிகளைப் வெறுப்புணர்வையோ அல்லது பிரிவினையையோ விதைக்கப் பயன்படுத்துவதை அரசு அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் நோக்கில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தேசிய ஒற்றுமைத் துறை முழு ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இது குறித்துப் பேசியிருந்த அமைச்சர் ங்கா கோர் மிங், வழிபாட்டுத் தலங்கள் அமையவுள்ள நிலங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றைச் சட்டப்பூர்வமாக முறைப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படத் தனது அமைச்சு தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here