நீலாய் | பிப்ரவரி 28, 2026:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலாய் பகுதியில் நிகழ்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட யோ ஹொக் சன் (Yeoh Hock Sun) என்பவர், நேற்று (பிப்ரவரி 27) இரவு 8:18 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) உயிரிழந்தார் என்று, நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்பிரிண்டெண்டென்ட் ஜோஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காத ‘ரிஃப்ராக்டரி ஷாக்’ (Refractory Shock) என்ற நிலை காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
கடந்த 2021 டிசம்பர் 22-ஆம் தேதி, டேசா பால்மா (Desa Palma) அடுக்குமாடி குடியிருப்பில் வெடிபொருளைக் கையாண்டபோது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இவர் தலைமறைவானார். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுடன் இருந்த இவர், டிசம்பர் 27-ஆம் தேதி ஒரு காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டறியப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே இவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
இவரது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கஜாங் சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவரது மரணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















