கல்வி, சுகாதாரம், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம்- ஆந்திர அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆந்திராவில் சஞ்சீவானி மருத்துவ சேவை உள்ளிட்ட சில முக்கிய சமூகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பில்கேட்ஸ் இன்று ஆந்திரா வந்தார்.

அமராவதியில் உள்ள மாநில தலைமை செயலகத்திற்கு சென்றார். பில்கேட்ஸுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் பில் கேட்ஸ் குழுவினர் அவர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, பில்கேட்ஸ் சந்திப்பு நடந்தது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பொது சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் முழுவதும் சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகால இலக்குகளை கோடிட்டுக் காட்டும் மாநிலத்தின் ஸ்வர்ணந்திரா தொலைநோக்கு 2047 குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார்.

மெட்டெக் திட்டங்கள், நோயறிதல் சேவைகள், துல்லியம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சஞ்சீவனி திட்டம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.

பின்னர், பில்கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து, அமராவதிக்கு அருகிலுள்ள உண்டவல்லி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய வயலைப் பார்வையிட்டார். டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்பட்ட விவசாய நடைமுறைகளை அவரது குழு பார்வையிட்டனர்.

தொழில்நுட்பம் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தில் நிலையான விவசாயத்தை ஆதரிக்க முடியும் என செயல்விளக்கம் அளித்தனர்.

ஆந்திர மாநில அரசின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டினார். மேலும் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here