கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; மும்பையில் 50 சதவீத ஓட்டல்கள், உணவு விடுதிகளை மூட முடிவு

மும்பை ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. சில இடங்களில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் சங்கத்திற்கான கூட்டமைப்பின் துணை தலைவர் மற்றும் அதன் மேற்கிந்திய செய்தி தொடர்பாளரான பிரதீப் ஷெட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான விநியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏறக்குறைய ஓட்டல்கள், உணவு விடுதிகளை மூட கூடிய சூழல் காணப்படுகிறது. 5-ந்தேதி மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சக அறிவிப்பால், வினியோகஸ்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், மும்பை, புனே, நாக்பூர் நகரங்களிலும், டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன என அவர் கூறுகிறார். இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் 2 நாட்களில், மும்பையில் 50 சதவீத ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை தற்காலிக அடிப்படையில் மூட கூடிய சூழல் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here