மறு ஆய்வு நிறைவு: அடுத்த சிக்கலில் விஜய்யின் “ஜனநாயகன்”..?

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமையாததால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு மேலும் தாமதமானது

இதற்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டு என பல இடங்களில் முயற்சி செய்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது. கடந்த மார்ச் 9ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று மும்பையில் தணிக்கை குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் அரசியல் சார்ந்த கருத்துகள் ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று தணிக்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, படம் வெளியாவது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here