முறையான ஆவணமற்ற 21 பேர் கெடா குடிநுழைவுத் துறையினரால் கைது

அலோர் ஸ்டார்:  கெடா குடிவரவுத் துறை, நேற்று சுங்கைப் பட்டாணியில் உள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தில் ‘Ops Kutip’ என்ற அதிரடி நடவடிக்கையில் 21 வெளிநாட்டினரைக் கைது செய்தது. பிற்பகல் 12.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​மொத்தம் 127 வெளிநாட்டினர் சோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை அதிகாரிகளின் இருப்பை உணர்ந்தவுடன் சில வெளிநாட்டினர் தப்பி ஓடினர். இருப்பினும், அப்பகுதி அமலாக்கப் பணியாளர்களால் சூழப்பட்டிருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. செல்லுபடியாகும் அனுமதிச்சீட்டை சமர்ப்பிக்கத் தவறியதற்காக, அவர்கள் அனைவரும் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று இன்றைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில், வெளிநாட்டினரின் நடமாட்டத்தால் உள்ளூர் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக சமூகத்திடமிருந்து பெறப்பட்ட புகார்களின் காரணமாகவே இந்த நடவடிக்கைக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கெடா குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here