குடும்ப உறுப்பினர்களுக்குச் சேமிப்பைப் பகிர ‘i-Legasi’ வசதியை அறிமுகம் செய்தது EPF!

கோலாலம்பூர்:

மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம் (EPF), தனது உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதியச் சேமிப்பின் ஒரு பகுதியைத் தங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களின் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளும் ‘i-Legasi’ எனும் புதிய வசதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

55 அல்லது 60 வயதை எட்டிய, போதுமான சேமிப்பைக் கொண்டுள்ள உறுப்பினர்கள் மட்டுமே இப்புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.

உறுப்பினர்கள் தங்களின் அடுத்த தலைமுறையினரின் நிதி நிலையை வலுப்படுத்தவும், குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இது வழிவகை செய்கிறது.

இது குறித்துப் பேசிய வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் சுல்கர்னைன் ஓன், உறுப்பினர்கள் தங்களின் மொத்தச் சேமிப்பையும் ஒரே நேரத்தில் செலவிடுவதைத் தவிர்த்து, மாதந்தோறும் சீரான வருமானத்தைப் பெறும் வகையில் ‘i-Emas’ எனும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

மேலும், உறுப்பினர்கள் தங்களின் வருங்கால நிதித் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட உதவும் வகையில் ‘Retirement Goal Calculator’ எனும் மின்னியல் கருவியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நீண்டகால ஓய்வூதிய வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிடுவதற்கும், குடும்ப உறுப்பினர்களிடையே நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த நவீன முயற்சிகள் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here