நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய் …

சென்னை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோரின் இல்லங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்றார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்த முதல்-அமைச்சரை வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். தங்கள் வீட்டிற்கு வருகை தந்த விஜய்யை, வாசலில் காத்திருந்து ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

பின்னர் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்த சீமான், அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதோடு விஜய்யும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் கலந்து பேசினர். இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார். அரசியல் தலைவர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேசியிருப்பது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு என பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here