ஈப்போவில் உள்ள செம்பிறை சங்க மண்டபத்தில் பகவான் கணக்கன்பட்டி சச்சிதானந்த சற்குரு சபையின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக டாக்டர் லோகநாதனின் வழிகாட்டுதலின் பேரில் யோகா, நடைப்பயிற்சி , ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை இச்சபை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை தொடங்கி வைத்து டாக்டர் லோகநாதன் உரையாற்றினார்.அவர் தம் உரையில்; தாயின் மகத்துவம் குறித்து உருக்கமாகப் பேசியதுடன், “கடவுளை நாம் நேரில் காண முடியாது. ஆனால், கடவுளின் வடிவமாக இவ்வுலகில் நம்மை அன்போடு வளர்த்து, வாழ்வின் எல்லா தருணங்களிலும் துணைநிற்கும் தாயை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார். மேலும், அன்னையர் தினத்தில் மட்டும் அல்லாது ஒவ்வொரு நாளும் தாய்மார்களை அன்புடனும் அக்கறையுடனும் கவனிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என அவர் வலியுறுத்தினார். இந்த விழாவில் 35 தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேவேளை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மேடையேற இயலாத நிலையில் இருந்த ஒரு தாயாரும் சிறப்பாக மரியாதை செலுத்தப்பட்டார்.
மேலும், பெடோங்கையைச் சேர்ந்த ஷாஷினி வழங்கிய சிலம்பாட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஷர்வினுக்கு கல்வி உதவித்தொகையாக நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தாய்மார்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.“தாய் இருக்கும் வீடு தான் உலகின் முதல் ஆலயம்; தாயின் அன்பே வாழ்வின் நிலையான ஆசீர்வாதம்” என்ற பொன்மொழியுடன் விழா நிறைவுபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
(எஸ்.லிங்கேஸ்வரன்)











