ஈப்போ:
தைப்பிங்கில் சட்டவிரோதமாக டீசல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை முறியடித்த பேராக் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம், சுமார் RM121,100 மதிப்பிலான பொருட்கள் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (மே 12) மதியம் 1:30 மணியளவில் ‘ஒப்ஸ் திரிஸ் 4.0’ (Ops Tiris 4.0) மற்றும் ‘ஒப்ஸ் ஜெரிஜி’ (Ops Jeriji) திட்டத்தின் கீழ், தைப்பிங்கில் உள்ள ஒரு திறந்தவெளியில் டிரெய்லர் லோரியில் இருந்து கொள்கலன்களுக்கு டீசல் மாற்றப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல்சார் காவல்துறையினருடன் இணைந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று,பேராக் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் இயக்குனர் டத்தோ கமாலுதீன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சோதனையின்போது, 32 வயதுடைய உள்ளூர் லோரி ஓட்டுநர் மற்றும் டீசலை வாங்க வந்ததாகக் கருதப்படும் 67 வயதுடைய முதியவர் ஆகிய இருவரும் பிடிபட்டனர்.
லோரியில் இருந்து டீசலை ‘ஜெர்ரிகேன்களில்’ (Jerry cans) நிரப்பி, அதனை ஒரு டொயோட்டா காரில் ஏற்றிக்கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். சோதனையில் 40 லிட்டர் டீசல், ஒரு டிரெய்லர் லாரி, ஒரு டொயோட்டா கார், ஒரு ‘பிளீட் கார்டு’ (Fleet card), குழாய்கள் மற்றும் 13 ஜெர்ரிகேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட இருவரும் கட்டுப்பாட்டுப் பொருட்களைக் கையாளுவதற்கான உரிய அனுமதிக் கடிதங்களை வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1974-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
தனிநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM10 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேநேரம் நிறுவனங்களுக்கு முதல் குற்றத்திற்காக RM20 லட்சம் வரையிலும், அடுத்தடுத்த குற்றங்களுக்கு RM50 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
மானியம் வழங்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுப் பொருட்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு டத்தோ கமாலுதீன் கேட்டுக்கொண்டார்.




















