மழை பெய்யும் போது நிலவும் வெள்ளம், மண் சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்ய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ டாமான்சாரா ரெஷிடன்ஸ் உள்ள பகுதிக்கு வருகை புரிந்து பார்வையிட்டார். மழையின் போது அங்குள்ள தடுப்புச் சுவரில் (Retaining Wall) இருந்து மழை நீர் கூடிய சேற்றுடன் பெருக்கெடுத்து ஓடுவதை அவர் கவனித்தார்.
இது குறித்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என அவர் தெரிவித்தார். புதிய மேம்பாட்டுத் திட்டம் மலைச்சரிவுக்கு மேலே 26 அடுக்குகள் கொண்ட 3 புளோக் அடுக்குமாடிக் கட்டுமானக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாகவும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த சரிவு மூன்றாம் அல்லது நான்காம் நிலை சரிவா என்பதையும், அங்கு கட்டுமானங்களைத் திட்டங்கள் தொடர முடியுமா என்பதையும் ஆராய வேண்டும் என பத்திதிக்கையாளர் சந்திப்புக் கூட்டதில் அவர் தெரிவித்தார். மேம்பாட்டாளர் (Developer) 14 நாட்களுக்குள் அந்த சரிவின் பாதுகாப்பு நிலை குறித்து கட்டுமான நிபுணர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறுகியக் கால நடவடிக்கையில் உடனடியாக அந்த இடத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும், வடிகால் அமைப்புகளைச் சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும், அந்த நிரந்தர தீர்வுக்கு நிபுணர் அறிக்கை மிக முக்கியமானது என டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குடியிருப்பாளர்களின் அச்சத்தைப் போக்கச் சுபாங் ஜெயா மாநகர மன்றம், போலிஸ்,மேம்பாட்டாளர்கள் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இது மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நிபுணர்களின் ஆய்வுக்குப் பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேற்கண்டவாறு உறுதி அளித்துள்ளார்.











