கோலாலம்பூர்:
மலேசியாவின் பாரம்பரிய இன மற்றும் மத அடிப்படையிலான அரசியலுக்கு அப்பாற்பட்டு, தரவுகள், உண்மைகள், மக்கள் சேவையின் அடிப்படையில் ‘மிதவாத அரசியல்’ (Moderate Politics) கொள்கையைக் கொண்டுள்ள தெங்கு ஜாஃப்ருல் அஜீஸ் மற்றும் கைரி ஜமாலுடின் ஆகிய இரு தலைவர்களும் நாட்டின் எதிர்கால அரசியல் மாற்றத்திற்குப் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டிற்குப் பிறகு மலேசியாவில் பலமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், நாடு இன்னும் முழுமையாக இன-மத அரசியல் வட்டத்திலிருந்து விடுபடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நகர்ப்புற மற்றும் படித்த இளைஞர்களிடையே இவர்களின் முற்போக்கு சிந்தனைகள் வரவேற்பைப் பெற்றாலும், கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களைச் சென்றடைய இன்னும் காலம் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திலும் சில தலைவர்களிடையே பழைய அரசியல் போக்கு நீடிக்கும் வேளையில், ஸ்வீடன், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களைப் போலத் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் ஜாஃப்ருல், கைரி ஆகியோரின் அணுகுமுறை, மலேசியாவை மிகவும் முதிர்ச்சியடைந்த, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கி இட்டுச்செல்லும் என அவர் கணித்துள்ளார்.




















