மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா), நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஆறு புதிய திட்டங்களை அமலாக்குவதன் வழி இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இங்குள்ள HRD Corp தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படவுள்ள அதிகபட்சமாக RM50,000 வரையிலான தொழில் தொடக்க வணிக மானியங்கள் உட்பட, பி40 மற்றும் எம்40 பிரிவினரை முதன்மை இலக்காகக் கொண்ட இந்த ஆறு புதிய திட்டங்களுக்கும் ஒட்டுமொத்தமாக RM65.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
“அனைவரையும் உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையை வலியுறுத்தும் மடானி அரசின் கோட்பாட்டிற்கு இணங்க, பொதுச் சேவைத் துறையின் (JPA) ஒப்புதலோடு மித்ரா பிரிவு தற்போது மனிதவள அமைச்சின் கீழ் ஒரு முழுமையான இலாகாவாக (Jabatan) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேலும் முறையான, வெளிப்படையான, திறமையான மற்றும் அதிக தாக்கம் கொண்ட முறையில் மித்ராவால் செயல்படுத்த முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார். அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அந்த 6 புதிய திட்டங்களின் முழுமையான விவரங்கள் வருமாறு:

*(அ) கல்வித் திட்டங்கள் (INISIATIF PENDIDIKAN)*
*1.’செலிக் மடானி’ (CELIK MADANI) – ஆரம்பக் கல்வி மானியத் திட்டம்*
பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்தியக் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்விக்கான நிதிச் சுமையைக் குறைத்து, தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒரு குழந்தைக்கு (11 மாதங்களுக்கு) ஆண்டுக்கு அதிகபட்சமாக RM2,530 மதிப்புள்ள பாலர் பள்ளி (Tadika) கட்டண மானியம் மற்றும் காலை உணவு உதவி (மாதத்திற்கு RM230) வழங்கப்படும். RM10 மில்லியன் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டைக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் 4,000 பி40 இந்தியக் குழந்தைகள் பயனடைவர்.
*2. ‘கல்வி மடானி’ (KALVI MADANI) – மடானி டியூஷன் திட்டம்*
2026 ஆம் ஆண்டு எஸ்பிஎம் (SPM) மற்றும் எஸ்டிபிஎம் (STPM) எழுதவிருக்கும் சுமார் 5,000 பி40 மாணவர்களின் கல்விச் சாதனையை மேம்படுத்த, தேர்வுத் தயாரிப்பு, வழிகாட்டல் மற்றும் ஊக்கமூட்டும் வகுப்புகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
RM5 மில்லியன் ஒதுக்கீட்டைக் கொண்ட இத்திட்டத்திற்கான ‘திட்ட முன்மொழிவுக் கோரிக்கை’ (RFP) ஜூன் 5 முதல் திறக்கப்படும். கல்வி அமைச்சின் (KPM) கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, மலாய், தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் வரலாறு போன்ற முக்கிய பாடங்களை வழங்கும் டியூஷன் மையங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் பி40 மாணவர்களுக்கும், புறநகர்ப் பகுதி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*(ஆ) தொழில்முனைவுத் திட்டம் (INISIATIF KEUSAHAWANAN)*
*3. ‘உயர்வு மடானி’ (UYARVU MADANI) – பி40/எம்40 இந்திய சமூகத் தொழில்முனைவோருக்கான மானிய உதவித் திட்டம்*
இந்திய சமூகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர (PMKS) தொழில்முனைவோருக்கு சிறு வணிக மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக ‘தொழில் தொடக்க’ (Startup) மானிய உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியான 500 இந்தியத் தொழில்முனைவோருக்கு அதிகபட்சமாக RM50,000 வரை ஒருமுறை கட்டம் கட்டமாக வழங்கப்படும் (“one-off”) மானிய உதவி அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் திறக்கப்படும்.
இந்த உதவி மானியத்துக்காக அனுமதிக்கப்பட்ட வணிகத் துறைகள்:
உணவு மற்றும் பானங்கள் (F&B), இணையவழி வணிகம் (e-commerce), சில்லறைக்கடைகள், அழகு நிலையம் (Salun), வாகன பழுதுபார்ப்புப் பட்டறை (Workshop), தையல் மற்றும் ஃபேஷன், விவசாயம்/விவசாய உணவு, அச்சிடுதல்/கிராஃபிக் வடிவமைப்பு, தூய்மைப் பணிச் சேவைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம்/டிஜிட்டல் ஆகிய துறைகள் இதில் அடங்கும்.
*(இ) இந்திய சமூகத்திற்கான ‘மடானி மக்கள்’ திட்டம் (INISIATIF PROGRAM MADANI RAKYAT KOMUNITI INDIA)*
*4.நாடாளுமன்ற சேவை மையங்களுடனான கூட்டுறவுத் திட்டம்*
புறநகர், கிராமப்புறங்கள் மற்றும் மேம்பாட்டு உதவிகள் எளிதில் சென்றடையாத பகுதிகளில் வாழும் இந்திய மக்களைச் சென்றடைய மித்ரா வியூக ரீதியான கூட்டுறவை நாடியுள்ளது. குறிப்பாக, இந்தியர்கள் அதிகமாக வாழும் 9 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 1.7 மில்லியன் இந்திய மக்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமையவுள்ளது.
இதன் கீழ் அரசாங்கத்தின் 80 நாடாளுமன்ற மக்கள் சேவை மையங்கள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தலா RM150,000 நிதி வழங்கப்படும். இந்த சேவை மையங்கள் கல்வி, தொழில்முனைவு, சமூக மேம்பாடு மற்றும் ஆரோக்கியம் ஆகிய 4 முக்கிய எல்லைகளுக்குட்பட்ட திட்டங்களை முன்னெடுக்கும். இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு RM12 மில்லியன் ஆகும். (தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை மையங்களை மித்ரா அலுவலகம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்).
*(ஈ) ஆரோக்கியத் திட்டம் (INISIATIF KESIHATAN)*
*5. ‘ஆரோக்யா மடானி’ (AROGYA MADANI) – டயாலிசிஸ் உதவி மானியத் திட்டம்*
தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆரோக்கியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு நோயாளிக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக RM5,000 மானியத்தை வழங்கும் (ஒரு டயாலிசிஸ் முறைக்கு RM200 வீதம் அதிகபட்சம் 25 முறைகள்). RM6.5 மில்லியன் ஒதுக்கீட்டில் 1,300 நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் இதன் மூலம் பயனடைவர். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 5 முதல் திறக்கப்படும்.
*(உ) சமூகத் திட்டம் (INISIATIF SOSIAL)*
*6. ‘துணை மடானி’ (THUNAI MADANI) – தனிநபர் உதவித் திட்டம்*
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குப் பிந்தைய வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதற்காக, நிதி உதவி மற்றும் சமூகநலன் ஆதரவு தேவைப்படும் பி40 தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இத்திட்டம் நேரடியாக உதவும். RM5,000 வரை ஒருமுறை வழங்கப்படும் (“one-off”) இந்த நிதியுதவி, சுமார் 10,000 பி40 இந்திய மக்களைச் சென்றடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் தகுதி மற்றும் அவசரத் தன்மைக்கு ஏற்ப பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஜூன் 5 முதல் தொடங்கும்.
இந்த ‘துணை மடானி’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 முக்கிய உதவித் திட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன:
திட்டம் 1: பேரிடர் உதவி திட்டம் (Pakej Prihatin Bencana):
வெள்ளம், புயல், நிலச்சரிவு, தீ விபத்து போன்ற பேரிடர்களுக்கு RM1,000; மரணச் சடங்கு உதவிக்கு RM1,500 மற்றும் அடிப்படை பயன்பாட்டுச் செலவு (Utility) உதவிக்கு RM1,000 வழங்கப்படும்.
திட்டம் 2: சுகாதார நலவாழ்வுத் திட்டம் (Pakej Kesihatan Sejahtera):
மருத்துவச் சிகிச்சை உதவிக்கு அதிகபட்சம் RM5,000, மருத்துவ உபகரணங்கள் வாங்க RM3,000, ஆட்டிசம் (Autism) ஆரம்பக்கட்ட உதவிக்கு RM3,000, மாணவர்/முதியோர் கண்ணாடி உதவிக்கு RM1,000 வரை வழங்கப்படும்.
திட்டம் 3: சமூக ஆதரவுத் திட்டம் (Pakej Sokongan Komuniti):
அடிப்படை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு RM1,000, மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) நடமாட்டம் மற்றும் போக்குவரத்து உதவிக்கு RM2,000 மற்றும் சமூக அவசரகால உதவிக்கு RM1,000 வழங்கப்படும்.
திட்டம் 4: குடும்ப நேயத் திட்டம் (Pakej Kasih Keluarga):
பிரசவித்த தாய்மார்களுக்கான உதவிக்கு RM1,000 மற்றும் பி40 பிரிவினருக்கான திருமண உதவிக்கு RM1,000 வழங்கப்படும்.

*அடுத்த மாத அறிவிப்பு:-*
செய்தியாளர் சந்திப்பின் நிறைவாகப் பேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், இந்த அனைத்து முயற்சிகளும் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும், பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதிலும், இந்திய சமூகத்திற்கு மிகவும் விரிவான மற்றும் பயனுள்ள முறையில் உதவிகளைச் சென்றடையச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நாட்டின் இந்திய சமூக மேம்பாட்டு இலக்கை வலுப்படுத்துவதற்காக, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப – தொழிற்கல்வி பயிற்சி (திவெட்) தொடர்பான கூடுதல் திட்டங்களை மித்ரா அடுத்த மாதம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களுக்கான தகுதி நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த விவரங்களை மித்ராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mitra.gov.my இல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
- ராமேஸ்வரி ராஜா









