ஜாலான் பினாங்கு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஊகிக்க வேண்டாம் – காவல்துறை

ஜார்ஜ்டவுன்: ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை, காவல்துறை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர், கண்காணிப்பாளர் லீ ஸ்வீ சாகே, மேலதிக விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் திடீர் மரண அறிக்கை (SDR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது, உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணம் குறித்த காவல்துறையின் விசாரணையையும், தீ விபத்துக்கான காரணம் குறித்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விசாரணையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 8.50 மணிக்கு பொதுமக்களிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்ததாகவும், பின்னர் இரவு 10.23 மணிக்கு தீயணைப்புப் படையினர் அந்த வளாகத்தின் முன் நுழைவாயிலுக்கு அருகில் 56 வயதான வெளிநாட்டு நபரின் உடலைக் கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முகமது ஷோகி ஹம்சா, முன்னாள் ஓடியன் சினிமா கட்டிடத்தில் இயங்கி வந்த ‘மிட்நைட் பிளாக்’ என்ற பொழுதுபோக்கு மையமாகப் பயன்படுத்தப்பட்ட, 1,393.54 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் சுமார் 70 சதவீத சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முகமது ஷோகி மேலும் கூறுகையில், முகமது போஷி சபி உல்லா என அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தவர், கட்டிடத்தின் வெளியேறும் வாயிலுக்கு அருகில் முதல் நிலை தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார் என்றும், தீ விபத்து ஏற்பட்டபோது தப்பிப்பதற்கு முன் அவர் உள்ளே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here