தாயார் உடலுக்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி

சென்னை, தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (வயது 85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.45 மணிக்கு மரணம் அடைந்தார்.

தாயார் மரணம் அடைந்த தகவல் கார் பந்தய பயிற்சிக்காக துபாயில் இருக்கும் அஜித்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இவர் இன்று காலை துபாயில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அஜித் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடக்கிறது.

அஜித்குமாரின் தந்தை கேரளம் மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அஜித்தின் தாயார் மோகினி மணி மேற்கு வங்காளம் கொல்கத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு அஜித்குமார், அனில்குமார் அனுப்குமார் என்ற மகன்கள் உள்ளனர்.

அஜித் தனது தாயார் பெயரில் மோகினி மணி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அஜித்குமாரின் தாயாருக்கு முதல்-அமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி மற்றும் திரை உலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தனது தாயார் மோகினி மணி இன்று காலை உயிரிழந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வந்தடைந்த நடிகர் அஜித்குமார் நேராக பாலவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here