ஜார்ஜ் டவுன், கர்னி டிரைவில், ஓட்டுநர் பிரேக் என்று நினைத்து ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், இன்று ஒரு கார் ஹோட்டலின் வரவேற்பறைக்குள் மோதியது. காலை 11.15 மணிக்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து, காரை ஓட்டி வந்த 61 வயதுப் பெண் ஒருவரிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக திமூர் லாவூட் காவல் நிலையத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது கூறினார்.
ஹோட்டலில் உள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த ஓட்டுநர் காவல்துறையிடம் தெரிவித்தார். “அவர் தவறுதலாக ஆக்சிலரேட்டர் பெடலை அழுத்தியதால், கார் ஹோட்டல் வரவேற்பறைக்குள் மோதியது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அலட்சியமான – பிறர் மீது அக்கறையின்றி வாகனம் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஒரு போர்ஷே டேகான் கார் ஹோட்டல் வளாகத்திற்குள் சிக்கியிருப்பதும், உடைந்த கண்ணாடிகள், சேதமடைந்த சுவர் பலகைகள் மற்றும் கஃபே பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கும் குப்பைகளும் காணப்பட்டன. கூரையின் சில பகுதிகள் மற்றும் வரவேற்பறையில் உள்ள சாதனங்களும் சேதமடைந்திருந்தன.








