(ரெ.மாலினி)
மலாக்கா:
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (UNHCR) அட்டையை வைத்திருக்கும் 55 ரோஹின்யா அகதிகள் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
மலாக்கா மாநில சுகாதாரம், மனிதவள மற்றும் ஒற்றுமைத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ந்வே ஹீ செம் கூறுகையில், இந்த 55 பேரில் 40 பேர் குழந்தைப் பிரசவத்திற்காகவும், மேலும் 15 பேர் பிற சிகிச்சைகளுக்காகவும் மருத்துவ சேவையைப் பெற்றுள்ளனர் என்றார்.
இதன் மூலம், கடந்த ஐந்து மாதங்களில் மலாக்கா மருத்துவமனையில் மட்டும் சிகிச்சை பெற்ற ரோஹின்யா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அரசு சுகாதார நிலையங்களில் ரோஹின்யா இனத்தவரின் வருகை குறித்து சில தரப்பினரிடையே எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து, UNHCR அட்டை வைத்திருப்போருக்கான சிகிச்சை புள்ளிவிவரங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த சனிக்கிழமை, ரோஹின்யா அகதிகளின் சுகாதாரச் செலவுகளுக்காக அரசு ஆண்டுதோறும் சுமார் 30 ரிங்கேட் மில்லியன் செலவழிக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது. இதனால், உள்ளூர் வரி செலுத்துவோரின் மீது ஏற்படும் நிதிச்சுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், மலேசியா தேசிய சர்வதேச சட்ட விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சலாவதி மாட் பாசிர் கூறுகையில், இந்த விவகாரம் இனி மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல; அதிகரித்து வரும் அகதி மக்கள்தொகையை நிர்வகிக்கும் நாட்டின் திறனுடனும் தொடர்புடையதாக உள்ளது என்றார்.
இந்நிலையில், மலேசியா சுகாத்கார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் ரோஹின்யா இனத்தவரின் வருகையில் எந்தவித அசாதாரண அதிகரிப்பும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.





















