சென்னை, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ வருகிற 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
சென்னை வருகை தந்த சமந்தா
‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த சமந்தா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
‘சண்டைக் காட்சிகளில் நடிப்பது எளிது’
நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “என்னைப் பொறுத்தவரை நடனக் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் எளிது. இந்தப் படத்தில் மெதுவாக நகரும் காட்சிகளோ, ஒருவரை அடித்தவுடன் அவர் வானத்தில் பறப்பது போன்ற காட்சிகளோ இல்லை. எங்களால் முடிந்தவரை இயல்பான சண்டைக் காட்சிகளையே படமாக்கியுள்ளோம்.
அந்த சண்டைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கும் படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினோம்” என்று சமந்தா தெரிவித்தார்.



















