தாமான் பூச்சோங் பிரிமா குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் CCTV காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!

கோலாலம்பூர்:

சுபாங் ஜெயா, தாமான் பூச்சோங் பிரிமாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.

நேற்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குப் புகார் கிடைத்துள்ளது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

“புகார்தாரரின் தங்கை, வீட்டின் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெள்ளை நிறச் சட்டையும் வெளிர் நீல நிற டெனிம் காற்சட்டையும் (Denim trousers) அணிந்த ஒரு மர்ம நபர் வீட்டின் பின்பகுதிக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகத் தனது சகோதரருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின்படி, அந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பின்புறப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த பொருட்களுக்கு எந்தவித சேதமோ அல்லது திருட்டோ ஏற்படவில்லை.”

அத்துமீறி நுழைந்த அந்த நபரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 448-இன் கீழ் (Trespassing) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த மர்ம நபர் வீட்டின் பின்புற பகுதிக்குள் நுழைந்ததும், அங்கிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை சைரன் (Security Alarm) ஒலிக்கத் தொடங்கியதால் அவர் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

“இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக 03-7862 7222 என்ற எண்ணில் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தருபவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்” என வான் அஸ்லான் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here