லங்காப், கம்போங் சுய் சாக் என்ற இடத்தில் நேற்று இரவு,உள்ள ஒரு காபி கடைக்கு வெளியே, மோட்டார் சைக்கிள் சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஓராங் அஸ்லி இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரது காதலி என நம்பப்படும் பெண் ஒருவர் காயமடைந்தார். ஆஸ்ட்ரோ அவானி செய்தி நிறுவனத்தின்படி, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத், இரவு 11.36 மணிக்கு இந்த விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.
சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு, தெலுக் இன்டான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 31 வயதான ஓராங் அஸ்லி இனத்தைச் சேர்ந்த அந்த நபர் பள்ளத்தில் முகம் குப்புறக் கிடப்பதைக் கண்டனர். 25 வயதான ஓராங் அஸ்லி இனப் பெண் ஒருவர் இரு மணிக்கட்டுகளிலும் எலும்பு முறிவுகளுடன் கரையில் கண்டெடுக்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ அதிகாரி ஒருவர், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்ததாக சபரோட்ஸி கூறினார். செயல்பாட்டுத் தளபதி நிலைமையை மதிப்பிட்டு, துறையின் SAVER மீட்புத் திட்டத்தைப் பயன்படுத்திய பின்னர், ஸ்ட்ரெச்சர் மூலம் பாதிக்கப்பட்டவரைப் பள்ளத்திலிருந்து மீட்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார் என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே நேரத்தில் அந்த நபரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட இந்த மீட்பு நடவடிக்கை இன்று அதிகாலை 1.06 மணிக்கு நிறைவடைந்தது.









