அரசியலுடன் அரண்மனையைத் தொடர்புபடுத்தி வீடியோ: காவல்துறை விசாரணை ஆரம்பம் – நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் அரச குடும்ப நிறுவனம் அரசியல் கட்சி ஒன்றினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகக் கூறி, சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ தொடர்பாகக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

TikTok செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ குறித்துப் புகார் பெறப்பட்டதை அடுத்து, விசாரணைத் தாள் திறக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அகமத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கு 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 4A(1), தண்டனைச் சட்டப் பிரிவு 505(b) (பொதுமக்களுக்கு அச்சம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் சட்டத்தின் பிரிவு 233 (தகவல் தொடர்பு சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வீடியோவின் முழுமையான உள்ளடக்கம் மற்றும் அது பேசப்பட்ட சூழல் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது பொது அமைதியைப் பாதிக்கும் வகையிலோ இந்த வீடியோ குறித்து எந்தவொரு ஊகங்களையும் செய்யவோ அல்லது அதனைப் பரப்பவோ வேண்டாம் என டத்தோ அல்ஸாஃப்னி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும்; இனம், மதம் மற்றும் அரசமைப்பு (3R) தொடர்பான உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைப் பேசி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

முன்னதாக, 16-ஆவது மாநிலத் தேர்தல் பிரசாரங்களில் அரச குடும்ப நிறுவனத்தை அரசியல் ஆதாயங்களுக்காக இழுக்க வேண்டாம் என நெகிரி செம்பிலான் அரண்மனை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தது. அரச குடும்ப நிறுவனம் எப்போதும் அரசியல் ரீதியாக நடுநிலையானது என்றும், வேட்பாளர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டுப் பண்பான முறையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அரண்மனை தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here