பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க கைக்குழந்தையுடன் வருகை தந்த த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி கைக்குழந்தையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட பல்லவி வெற் றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்த பல்லவி, வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இவர் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 36 வயதான த.வெ.க. வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கிய சமயத்தில் எம்.ஆர்.பல்லவி அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் கட்சி சார்பில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். வெற்றி பெற்ற சில நாட்களில், எம்.எல்.ஏ. பல்லவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தனது மகனுக்கு ‘TVK’ என்று பெயர் வைக்க உள்ளதாக பல்லவி எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும், கட்சி தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கு தனது குழந்தையுடன் பல்லவி வருகை தந்தார். இந்த நிலையில், த.வெ.க. தலைமையிலான தமிழக அரசு அமைந்த பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி தனது கைக்குழந்தையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here