கோலாலம்பூர்:
பஹாங், தெமர்லோ – திரியாங் சாலையின் 9-வது கிலோமீட்டரில் 32,000 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றி வந்த எண்ணெய்த் தாங்கி லோரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
நேற்று மாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததாகத் தெமர்லோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமத் நசீம் பஹ்ரோன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான், சிரம்பானில் இருந்து தெமர்லோ நோக்கிச் சென்று கொண்டிருந்த எண்ணெய்த் தாங்கி லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசைப் பாதைக்குள் நுழைந்து எதிரே வந்த ‘பெருடுவா பெஸா’ (Perodua Bezza) ரக கார் மீது நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் உடனடியாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. காரில் பயணித்த தாய் (39) மற்றும் அவரது 12 வயது மகன் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
லோரி ஓட்டுநர் தப்பினார்: விபத்துக்குள்ளான 37 வயது லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் தப்பிப்பிழைத்தார்.
வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிசெய்ய டி.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கி மரணத்தை விளைவித்தல்) விசாரணைக்கு உதவுவதற்காக லாரி ஓட்டுநர் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.
























