அவதூறு வழக்கை பட்டர்வொர்த் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி!;ச தீஸிற்கு RM3,000 செலவுத் தொகை வழங்க பேராக் எக்ஸோ சிவநேசனுக்கு தாப்பா நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர்:

பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஏ. சிவநேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி அளித்த தாப்பா உயர் நீதிமன்றம், முன்னாள் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டிக்கு RM3,000 செலவுத் தொகையாக வழங்க சிவநேசனுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் கமிஷனர் ஜமான் முகமது நூர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இவ்வழக்கில் சதீஸ் முனியாண்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டாக்டர் சாம்ஷேர் சிங் திண்ட், இவ்விவகாரத்தை விசாரித்துத் தடையுத்தரவு உள்ளிட்ட உரிய தீர்வுகளை வழங்கச் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், சதீஸ் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் வசிப்பதால் பட்டர்வொர்த் நீதிமன்றமே பொருத்தமான இடம் என்றும் முன்வைத்த வாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பேராக் மாநில இந்தியர் விவகாரங்கள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் துறையைக் கவனித்து வரும் சிவநேசன், கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி சதீஸ் தனது டிக்டாக் கணக்கில் பதிவிட்ட விடியோ ஒன்று தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி டிசம்பர் 1-ஆம் தேதி அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த விடியோவில் தமிழ் மொழியில் “குடிகாரன்” எனும் சொல்லைப் பயன்படுத்தி, அரசுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனத் தன்னைச் சித்தரித்துள்ளதாகச் சிவநேசன் குற்றஞ்சாட்டினார்.

இதற்காக நஷ்ட ஈடு, அந்த விடியோவை நீக்குதல், மேலும் அவதூறு பரப்பத் தடை உத்தரவு மற்றும் மூன்று முக்கியத் தமிழ் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் சிவநேசன் மனுவில் கோரியிருந்தார்.

ஜனவரி 19-ஆம் தேதி தாக்கல் செய்த தற்காப்பு வாக்குமூலத்தில், பேராக் மாநிலத்தில் அரசு நிலங்களில் புதிய இந்து ஆலயங்கள் அமைப்பதற்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையைத் தொடர்ந்து தான் அந்த விடியோவைப் பதிவிட்டதாகச் சதீஸ் தெரிவித்தார்.

அதில் தான் பயன்படுத்தியது உருவக மொழி (Kiasan) என்றும், அது சிவநேசனைக் குறிப்பிட்டுக் கூறப்பட்டதல்ல என்றும் விளக்கமளித்தார்.

தற்போது வழக்கின் விசாரணை பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்பிற்குச் சதீஸ் தனது வழக்கறிஞருக்கும் சட்டக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here