கோலாலம்பூர், செப்டம்பர் 27 :
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பல அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான வாகன நிறுத்துமிட பிரச்சனைகளால், நோயாளிகள் மற்றும் மருத்துவர் நியமனத்திற்கு அவர்களுடன் வருபவர்கள் மிகுந்த விரக்தியடைந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் இறுதியாக இந்த விஷயத்திற்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்த பிரச்சினையை விரிவாக ஆராய்ந்து வருவதாகவும், செர்டாங் மருத்துவமனை மற்றும் கிள்ளானில் உள்ள துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை போன்ற முக்கியமான மருத்துவமனைகளில் நிலவும் பார்க்கிங் பிரச்சனை பற்றி கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“மருத்துவமனை கட்டிடத் திட்டங்களில் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்குப் போதுமான கார் நிறுத்துமிடங்கள் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு காண பல்வேறு மருத்துவமனைகளை வரைபடமாக்கத் தொடங்கியுள்ளோம்,” என்று ஆசிய தோல் மற்றும் அழகியல் மருத்துவ உச்சி மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
தகவல் சேகரிப்பு முடிந்ததும், கோலாலம்பூர் மருத்துவமனையில் நீண்ட காலமாக நிலவும் பார்க்கிங் பிரச்சனையை தீர்க்க அமைச்சகம் செய்தது போல், பல மாடி கார் பார்க்கிங் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறையுடன் கலந்துரையாடும் என்று கைரி கூறினார்.









